
அவளுக்கு நான் தான் செல்லம்
அள்ளி எனை எடுப்பாள்
ஆசை தீர முத்தம் தந்து
கண்ணின் இமைபோல
காலமெல்லாம் காத்திடுவாள்
கல்லையும் கரையச்செய்யும்
கருணையின் உயிர்வடிவம்
படைத்தவன் எனக்களித்த
பரிசுத்தப் புதையல் அவள்
பாசமும் பற்றும் கொண்ட
பரிவுள்ள அன்னை அவள்
நோவினை நானுற்றாலோ
நொந்தவள் நோன்பு நோற்ப்பாள்
நெஞ்சோடு எனை அணைத்து
நெற்றியைத் தொட்டுப் பார்ப்பாள்
பள்ளியில் வகுப்பறையில்
பாடங்கள் கேட்கும் நேரம்
ஒளிந்து நின்று ரசித்திடுவாள்
ஒத்தையாய் சன்னலோரம்
பக்குவமாய் எடுத்து என்னை
பத்திரமாய் தன் இடுப்பில்
பரிவுடன் தான் சுமந்தாள்
பத்தாம் வயது வரை
கை நிறைய அள்ளி உண்ணு
விரல் நீக்கிச் சாப்பிடாதே
கனிவுடன் கண்டித்திடுவாள்
அவள் கை மணம் நினைவில் இன்னும்
அம்மாவுக்கென்று ஒரு
அற்புத வாசமுண்டு அவளின்
சாயம் போன வாயில்ச்சேலை
சாட்சியுண்டு என்னிடத்தில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக