அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்
போரொன்று இங்கே நிகழ்ந்தது அன்று
பாரினில் பாரத தேவியைக் காக்க
ஊரிலும் வீட்டிலும் உள்ளவ ரெல்லாம்
கேடுடை வெள்ளையர் நாட்டை விட்டகல
கத்தியும் தொட்டிடாது ரத்தமும் சொட்டிடாது
கத்தினார் வந்தே மாதரம் என்று
கபடமும் இல்லாது பகட்டும் கொள்ளாது
கதரினில் போரிட்டு வென்றனர் அன்று
பீரங்கி தோட்டா தொட்டது பலஉயிரை
யாரங்கே குருவியின் கூட்டத்தைச் சுட்டது
பாரெங்கும் பலநாட்டார் பதறிய வண்ணம்
பாரதத்தி லன்று நடந்ததொரு யுத்தம்
நீந்திக் கரைசேரா நீசர்க்கு மத்தியில்
காந்திமகான் கண்ட கண்ணொளி சுதந்திரம்
ஏந்தித் தோள்மீதினில் சுமந்தே நாமெல்லாம்
இத்தரை மீதினில் கொண்டு ஆடுவோம்
பச்சை புல்வெளி ஆடையாய்க் கொண்டு
பவளச் செங்காவியைச் சிந்தூர மிட்டு
பளிச்சிடும் வெள்ளை உள்ளம் நீகொண்டாய்
பாரதத்தாயே பல்லாண்டு வாழி
நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...
தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக